Search This Blog

Friday, September 26, 2025

கடவுள் வாழ்த்து

 வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்

கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்

சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து

முன்னி யவைமுடிக என்று.

விளக்கம்:

வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்காது; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இது உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக! (வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. ஆயின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து)


No comments:

Post a Comment